எல்லாம் தெரிந்தவரைப் போல சிலர் விமர்சித்து திரிகிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?
அருணகிரிநாதருக்கும் வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கும் ஒரு நாள் போட்டி. வில்லிப்புத்தூர் யாரையும் காது அறுக்கிறவர். இதை தவறென்று உணர்த்தி அவரை திருத்த நினைத்த அருணகிரி ஒரு நாள் வாதப்போரில் இறங்கினார்.
என்னுடன் வாதப் போருக்கு வருகிறீர்களே, என் நிபந்தனை என்னவென்று தெரியுமா எனக்கேட்டார். தெரியுமே காதை அறுப்பீர்கள்.போட்டி தொடங்கியது. இருவரும் மாறி மாறி வாதம் புரிந்தார்கள். ஒரு நாள் கந்தர் அந்தாதி புராணம் பாடினார் அருணகிரிநாதர். அதில் ஐம்பத்து மூன்று செய்யுள்களுக்கு சரியான பதில் சொல்லி வந்தார் வில்லிபுத்தூரார். ஐம்பத்து நான்காவது செய்யுளான கட்டளைக் கலித்துறையை 'த' வர்க்கத்தில் கேட்போர் திகைக்குமாறு பாடினார் அருணகிரிநாதர்.
அந்தச் செய்யுள் இதுதான்.
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தித்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதி திதிதுதி தீதொத்ததே
வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கு இதன் பொருள் தெரியவில்லை. காதைக் கொடுத்தார் வில்லிபுத்தூர் ஆழ்வார். அறுப்பாரா அருணகிரிநாதர். அவரைத் திருத்த வேண்டும் என்றுதானே இந்த வாதம்.
இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. ஏதும் தெரியாதவர்கள் என்றும் எவருமில்லை. உங்களுக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நம் இருவருக்கும் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம் இருவருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதனால் ஒருவனுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்லி திருத்த வேண்டுமே தவிர இப்படிக் காதை அறுக்கும் பாவத்தைச் செய்யக் கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக